தூடணன் மாய்தல் 3032. | சென்ற தேரையும், சிலையுடை மலை எனத் தேர்மேல் நின்ற தூடணன்தன்னையும் நெடியவன் நோக்கி, 'நன்று-நன்று, நின் நிலை!' என, அருள், இறை நயந்தான் என்ற காலத்து, அவ் வெய்யவன் பகழி மூன்று எய்தான். |
சென்ற தேரையும் - (அவ்வாறு எதிரில்) வந்த தேரையும்; சிலை உடை மலை என - வில்லையேந்திய ஒரு மலை போல; தேர் மேல் நின்ற - அத் தேரின் மேல் (வில்லேந்தி) நின்ற; தூடணன் தன்னையும் - தூடணனையும்; நெடியவன் நோக்கி - இராமபிரான் பார்த்து; 'நின் நிலை நன்று நன்று' என - '(போரில்) உனது உறுதி நிலை மிக நன்றாயிருந்தது' என்று; இறை அருள் நயந்தான் - அவனைச் சிறிது அருளோடு மதித்தான்; என்ற காலத்து - அவ்வாறு கூறிய அச் சமயத்தில்; அவ் வெய்யவன் - அந்தக் கொடியவனான தூடணன்; பகழி மூன்று எய்தான் - மூன்று அம்புகளைத் தொடுத்தான். தேரின் மேல் வில்லேந்தியவனாகத் தூடணன் வந்து நிற்க, அவனது தளராத வீரத்தை இராமன் பாராட்டி நிற்கையில் அத் தூடணன் இராமன் மேல் மூன்று கணைகளை விடுத்தான் என்பது. சிலையுடை மலை - வில்லேந்திய தூடணனுக்கு உவமை : இல்பொருளுவமை. நன்று நன்று - அடுக்கு உவமை பற்றியது. நெடியவன் - எங்கும் வியாபித்த திருமாலாகிய இராமபிரான். தன் பகைவனான தூடணனது வீரத்தைப் பாராட்டிய இராமனது சிறப்பைக் காட்டுவது இது. இறை - சிறிது. 158 |