3035. | தேவர் ஆர்த்து எழ, முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க் கடல் முழக்கு என ஓங்க, 'கா அடா இது, வல்லையேல், நீ' என, கணை ஒன்று ஏவினான்; அவன் எயிறுடை நெடுந் தலை இழந்தான். |
தேவர் ஆர்த்து எழ - தேவர்கள் மகிழ்ந்து ஆரவாரம் செய்யவும் முனிவர்கள் திசைதொறும் சிலம்பும் - முனிவர்கள் எல்லாத் திக்குகளிலும் நின்று ஆரவாரத்தோடு கூறுகின்ற; ஓவு இல் வாழ்த்து ஒலி - ஒழிவில்லாத வாழ்த்துகளின் ஓசை; கார்க் கடல் முழக்கு என ஓங்க - கரிய கடலின் முழக்கம் போல மிகுந்து விளங்கவும்; 'நீ வல்லையேல் இது கா அடா' என - 'நீ வல்லமையுள்ளவனானால் இந்த அம்பைத் தடுத்து உன்னைக் காத்துக் கொள்ளடா' என்று வீரவாதம் கூறி; கணை ஒன்று ஏவினான் - இராமபிரான் ஓர் அம்பைத் தொடுத்தான்; அவன் - அந்த அரக்கனான தூடணனும்; எயிறு உடை நெடுந்தலை இழந்தான் - கோர தந்தங்களையுடைய தன் பெரிய தலையை இழந்தான். கார்க் கடல் முழக்கு : நாற்றிசையிலும் நின்று நான்கு வேத மந்திரங்களைக் கொண்டு ஆசி கூறும் பேரொலிக்குக் கார்க் கடல் முழக்கு உவமையாம். 161 |