கலி விருத்தம் கரன் வெகுண்டு, பெரும்படையுடன் போருக்கு எழுதல் 3036. | தம்பி தலை அற்ற படியும், தயரதன் சேய் அம்பு படையைத் துணிபடுத்ததும், அறிந்தான், வெம்பு படை விற் கை விசயக் கரன் வெகுண்டான்- கொம்பு தலை கட்டிய கொலைக் கரியொடு ஒப்பான். |
கொம்பு தலை கட்டிய - தந்தங்கள் முகத்தில் உறுதியாக விளங்குகின்ற; கொலைக் கரியோடு ஒப்பான் - கொல்லுதலில் வல்ல யானை போன்றவனான; வெம்பு படை வில் கை விசயக் கரன் - உக்கிரமான பல வகைப் படைக்கலங்களையும் வில்லையும் ஏந்திய கைகளையும், வெற்றியையுமுடைய கரன்; தம்பி தலை அற்றபடியும் - தன் தம்பியான தூடணன் (இராமனது அம்பால்) தலை அறுபட்டு அழிந்ததையும்; தயரதன் சேய் அம்பு - தசரதனின் மைந்தனான இராமனது பாணம்; படையைத் துணி படுத்ததும் - தன் அரக்கப் படைகளை வெட்டித் துண்டாடியதையும்; அறிந்தான் - அறிந்து; வெகுண்டான் - சினங் கொண்டான். இராமபிரானால் தூடணன் தலையறுபட்டதையும், அரக்கச் சேனை துண்டு பட்டதையும் அறிந்து, கரன் வெகுண்டான் என்பது. 'கொம்பு தலை கட்டிய - கரனது முகத்தில் வெளிப்பட்டுக் காணப்படுகின்ற கோர தந்தங்கள் யானைத் தந்தம் போல்வன என்பது விளங்கும். 162 |