3037. அந்தகனும் உட்கிட,
     அரக்கர் கடலோடும்
சிந்துரம். வயப் புரவி,
     தேர் திசை பரப்பி,
இந்துவை வளைக்கும் எழிலிக்
     குலம் என, தான்
வந்து, வரி விற் கை மத
     யானையை வளைத்தான்.

    அந்தகனும் உட்கிட - (கோபங்கொண்ட கரன்) யமனும் அஞ்சும்படி;
அரக்கர் கடலோடும் - இராக்கதர் படையுடனே; சிந்துரம் -
யானைகளையும்; வயப் புரவி - வலிய குதிரைகளையும்; தேர் -
தேர்களையும்; திசை பரப்பி - எல்லாத் திசைகளிலும் பரவியிருக்கச்
செய்து; இந்துவை வளைக்கும் - சந்திரனை வளைத்துக் கொண்ட;
எழிலிக் குலம் என - மேகக் கூட்டங்கள் போல; தான் வந்து -
அரக்கனாகிய கரன் வந்து; வரி விற் கை மத யானையை - கட்டமைந்த
வில்லையேந்திய கையையுடைய மதயானை போன்ற இராமபிரானை;
வளைத்தான் - சூழ்ந்து கொண்டான்.

     அரக்கனான கரன் நான்கு வகைச் சேனைகளையும் கொண்டு
இராமபிரானை வளைத்தான் என்பது.

     இராமனுக்குச் சந்திரனும், அரக்கர் கூட்டத்திற்கு மேகக் கூட்டமும்
உவமை.

     வரி விற்கை மத யானை - இல்பொருளுவமை. எழிலி - மேகம் கடல்,
யானை : உவமையாகுபெயர்கள்.                                 163