3041. தான் உருவு கொண்ட தருமம்
     தெரி சரம்தான்
மீன் உருவும்; மேருவை விரைந்து
     உருவும்; மேல் ஆம்
வான் உருவும்; மண் உருவும்;
     'வாள் உருவி வந்தார்
ஊன் உருவும்' என்னும் இது
     உணர்த்தவும் உரித்தோ?

    தான் உருவு கொண்ட தருமம் - தருமமே ஒரு மனித வடிவம்
கொண்டாற் போன்ற இராமபிரான்; தெரி சரம் தான் - தேர்ந்தெடுத்து
எய்த அம்புதான்; மீன் உருவும் - நட்சத்திரங்களையும் ஊடுருவிச்
செல்லும்; மேருவை விரைந்து உருவும் - மேரு மலையையும் விரைவாகப்
புகுந்து உருவிச் செல்லும்; மேல் ஆம் வான் உருவும் - மேலேயுள்ள
வான மண்டலத்தையும் உருவிச் செல்லும்; மண் உருவும் - பூமியையும்
உருவித் துளைத்துச் செல்லும்; (என்றால்); வாள் உருவி வந்தார் -
வாளையுருவிக் கொண்டு போரிட வந்த அரக்கர்களின்; ஊன் உருவும்
என்னும் இது -
உடம்பை ஊடுருவிச் செல்லுமென்பது; உணர்த்தவும்
உரித்தோ -
எடுத்துக் கூறுவதற்கும் உரியதோ? (ஆகாது).

     நட்சத்திரம் முதலியவற்றைத் தடையற முழுதும் துளைத்துச்
செல்லவல்ல கூரிய வேகமுள்ள இராமபாணம் அரக்கருடலைத்
துளைத்ததென்பது தானே விளங்கும் என்றவாறு. தான் உருவு கொண்ட
தருமம் - அறமூர்த்தியான இராமன்.                             167