3042. | அன்று இடை வளைத்தவர் குலங்களொடு அடங்கச் சென்று உலைவுறும்படி, தெரிந்து கணை சிந்த, மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரைக் கொன்றனர், நுகர்ந்த பொருளின், கடிது கொன்ற |
அன்று இடை வளைத்தவர் - அப்பொழுது தன்னைச் சூழ்ந்த அரக்கர்கள்; குலங்களொடு அடங்க - தத்தம் கூட்டங்களோடு ஒரு சேர; சென்று உலைவு உறும்படி- அழிந்து போகும்படி; கணை தெரிந்து சிந்த- இராமபிரான் அம்புகளை ஆராய்ந்தெடுத்துச் செலுத்த (அந்த அம்புகள்); வலியோர்கள் - வலிமை மிக்கவர்; எளியோரை - எளியவர்களை; மன்றிடை நலிந்து கொன்றனர் - வெளியிடத்தில் வருத்திக் கொன்று; நுகர்ந்த பொருளின் - (அவர்களிடமிருந்து கவர்ந்து) தாம் அனுபவித்த (அவர்களை விரைவில் அழிக்கும்) செல்வம் போல; கடிது கொன்ற - விரைவாகக் கொன்றன. வலியவர் தம்மினும் எளியவரை வருத்தி அவரிடமிருந்து கவர்ந்த பொருள் அவ் வலியவரை நாசப்படுத்துமென்பது. நலிந்து கொள்வதற்கு ஏற்ற இடமாதல் குறித்து மன்றைக் கூறினார். 168 |