3043. கடுங் கரன் எனப் பெயர்
     படைத்த கழல் வீரன்,
அடங்கலும் அரக்கர்
     அழிவுற்றிட, அழன்றான்;
ஒடுங்கல் இல் நிணக் குருதி
     ஓதம்அதில் உள்ளான்
நெடுங் கடலில் மந்தரம் என,
     தமியன் நின்றான்.

    கடுங் கரன் எனப் பெயர் படைத்த - கொடிய கரன் என்று பேர்
பெற்ற; கழல் வீரன் - வீரக் கழல் பூண்ட வீரன்; அரக்கர் அடங்கலும்
அழிவு உற்றிட -
அரக்கரெல்லோரும் (போரில்) அழிவடைய; அழன்றான்
-
சினங் கொண்டான்; ஒடுங்கல் இல் - குறைவில்லாத; நிணக் குருதி
ஓதம் அதில் -
கொழுப்போடு கூடிய இரத்த வெள்ளத்தினிடையே;
உள்ளான் - உள்ளவனான கரன்; நெடுங் கடலில் மந்தரம் என - பெரிய
கடலினிடையே மந்தர மலை போல; தமியன் நின்றான் - தனித்தவனாக
நின்றான்.

     அரக்கர் எல்லோரும் போரில் அழிவெய்திட, நிணக் குருதி
வெள்ளத்தில் நிற்கும் கரன் பாற்கடலைக் கடையும்பொழுது, அதனிடையில்
நின்ற மந்தர மலை என்னும் மத்துப் போன்றவன் என்றார்.          169