இராமன்முன் கரன் எதிர்ப்படல்

3044.செங் கண் எரி சிந்த, வரி
     வில் பகழி சிந்த,
பொங்கு குருதிப் புணரியுள்,
     புகையும் நெஞ்சன்-
கங்கமொடு காகம் மிடைய,
     கடலின் ஓடும்
வங்கம் எனல் ஆயது ஒரு
     தேரின்மிசை-வந்தான்.

    புகையும் நெஞ்சன் - சினத்தீ மூளும் மனமுடைய அந்தக் கரன்;
செங்கண் எரி சிந்த - சிவந்த கண்கள் நெருப்புப் பொறியைச் சொரியவும்;
வரிவில் பகழி சிந்த - கட்டமைந்த வில் அம்புகளைப் பொழியவும்;
பொங்கு குருதிப் புணரியுள் - மேலே பொங்கியெழுகின்ற இரத்தக்
கடலிலே; கங்கமொடு காகம் மிடைய - கழுகுகளும் காக்கைகளும்
நெருங்க; கடலில் ஓடும் வங்கம் எனல் ஆயது - கடலிலே விரைந்து
செல்லும் கப்பலென்று உவமை சொல்லுமாறு; ஒரு தேரின் மிசை வந்தான்-
ஒரு தேரின் மேல் வந்தான்.

     கங்கம் - கழுகு கங்கமொடு காகம் - இவை பிணங்களைத் தின்னும்
பொருட்டுப் போர்க் களத்திற்கு வந்தவை. இது கரனுக்குத் தீ நிமித்தமுமாம்.
குருதி வெள்ளமாக அமைந்ததற்கேற்ப அதனிடையே செல்லும் தேர்
வங்கமாக உவமிக்கப் பெற்றது.                                 170