3047. ஊழி எரியின் கொடிய
     பாய் பகழி ஒன்பான்,
ஏழ் உலகினுக்கும் ஒரு
     நாயகனும், எய்தான்;
சூழ் சுடர் வடிக் கணை
     அவற்று எதிர் தொடுத்தே,
ஆழி வரி விற்
     கரனும், அன்னவை அறுத்தான்.

    ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் - ஏழு வகையான
உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற நாயகனான இராமபிரானும்; ஊழி எரியின்
கொடிய -
ஊழிக் காலத்து உலகையழிக்க வல்ல நெருப்பைக் காட்டிலும்
கொடுமையுடையனவாய்; பாய் பகழி ஒன்பான் - பாய்ந்து செல்லும்
ஒன்பது பாணங்களை; எய்தான் - (கரன்மேல்) தொடுத்தான்; ஆழி
வரிவிற் கரனும் -
வட்டமாக வளைந்த வில்லையுடைய கரன் என்னும்
அரக்கனும்; சுடர் சூழ் வடிக் கணை - ஒளி பரவும் கூரிய (ஒன்பது)
அம்புகளை; அவற்று எதிர் தொடுத்து - அந்தக் கணைகளுக்கு எதிராகச்
செலுத்தி; அன்னவை அறுத்தான் - அந்த அம்புகளைத் துணித்தான்; ஏ -
அசை.

     ஏழுலகினுக்கு ஒரு நாயகன் - கீழேழு, மேலேழு ஆகிய பதினான்கு
உலகங்களுக்கும் தலைவனாகிய இராமபிரான். 'செம்மாண் தனிக்கோல்
உலகேழினும் செல்ல நின்றான்' (168) எனத் தயரதன் சிறப்பிக்கப்
பெற்றமையால் அவனுக்குப் பின் அவன் மைந்தனான இராமபிரானுக்கும்
அவ்வுரிமையுடைமை காரணமாகவும் கூறப் பெற்றது எனலாம்.         173