3048.கள்ள வினை மாய
     அமர் கல்வியின் விளைத்தான்;
வள்ளல் உருவைப் பகழி
     மாரியின் மறைத்தான்;
உள்ளம் உலைவுற்று, அமரர்
     ஓடினர் ஒளித்தார்;
வெள் எயிறு இதழ்ப்
     பிறழ, வீரனும் வெகுண்டான்.

    (அவ்வாறு அம்புகளால் இராமபாணங்களை அறுத்த கரன்) கல்வியின்-
(தான் கற்றறிந்த) வித்தையினால்; கள்ள மாய வினை அமர் - வஞ்சகம்
நிறைந்த மாயப் போர்; விளைத்தான் - செய்தான்; பகழி மாரியின் -
(தான் எய்த) அம்பு மழையால்; வள்ளல் உருவை மறைத்தான் -
இராமபிரானின் திருமேனியை மறையச் செய்தான் (அதைக் கண்ட); அமரர்
உள்ளம் உலைவுற்று -
தேவர்கள் மனத்தில் நடுக்கமுற்று; ஓடினர்
ஒளித்தார் -
ஓடியொளிந்து கொண்டார்கள்; வீரனும் - மாவீரனான
இராமபிரானும்; வெள் எயிறு இதழ்ப் பிறழ - தன் வெண்மையான பற்கள்
உதட்டின் மேல் விளங்க (பற்களால் உதட்டைக் கடித்தவாறு); வெகுண்டான்-
கோபங் கொண்டான்.

     தேவர்களும் அஞ்சி நடுங்குமாறு கரன் மாயப் போரால் இராமனின்
திருமேனியை அம்பு மழையால் மறையச் செய்தான் என்பது. கல்வி : கற்ற
வித்தை மந்திரம்.

     கள்ள மாய வினையமர் : தனது உண்மையுரு மறைந்தும், வேறு வேறு
பல வடிவங் கொண்டும் நின்று பல வகையாகச் செய்யும் போர்.       174