3052. | கண்டு நின்று, கருத்து உணர்ந்தான் என, அண்டர் நாதன் தடக் கையில், அத் துணை, பண்டு போர் மழுவாளியைப் பண்பினால் கொண்ட வில்லை, வருணன் கொடுத்தனன். |
வருணன் - (வானத்திலிருந்து வந்து போரைப் பார்த்து நின்ற) வருண தேவன்; கண்டு நின்று - (இராமன் பின்னால் கையை நீட்டியதைப்) பார்த்து நின்று; கருத்து உணர்ந்தான் என - (அப் பெருமானின்) மனக் கருத்தை யறிந்தவனாகி; பண்ட போர் மழு வாளியை - முன்பு போர்க்கு உரிய கருவியாக மழுவைக் கொண்டவனான பரசுராமனிடமிருந்து; பண்பினால் கொண்ட வில்லை - (இராமன்) உரிமையால் கொண்ட விட்டுணுதனுசு என்னும் வில்லை; அத் துணை - அச் சமயத்தில்; அண்டர் நாதன் தடக் கையில் - தேவர்களுக்குத் தலைவனான இராமபிரானின் நெடிய கரத்திலே; கொடுத்தனன் - கொடுத்திட்டான். மழுவாளி - மழுவையாள்பவன், பரசுராமன். 178 |