இராமனும் கரனும் எதிர்ரெதிர் பொருதல் 3054. | ஏற்றி நாண், இமையாமுன் எடுத்து, அது, கூற்றினாரும் குனிக்க, குனித்து, எதிர் ஆற்றினான்அவன் ஆழிஅம் தேர், சரம் நூற்றினால், நுண் பொடிபட, நூறினான். |
(இவ்வாறு) இமையாமுன் - கண் இமைக்கும் நேரத்திலே; அது எடுத்து - அந்த வில்லையேந்தி; கூற்றினாரும் குனிக்க - யமனும் கண்டு அஞ்சும்படி; குனித்து - வளைத்து; நாண் ஏற்றி - நாணையிழுத்துப் பூட்டி; சரம் நூற்றினால் - நூறு அம்புகளால்; எதிர் ஆற்றினான் அவன் - எதிரே வந்து போர் செய்தவனான அந்த அரக்கனுடைய; ஆழி அம் தேர்- வலிய சக்கரம் பூண்ட அழகிய தேரை; நுண் பொடிபட நூறினான் - நுண்ணிய பொடியாகுமாறு அழித்தான். எதிர்த்த கரனது தேரை இராமபிரான் நூறு அம்புகளால் அழித்தான் என்பது. கூற்றினாரும் குனித்தது - அதுகாறும் இராவணனது ஆணைக்கு அஞ்சி அரக்கரிடம் அணுகாதிருந்து, இப்பொழுது இராமனின் துணை வலியால் இனி அவ்வரக்கர்களைப் பற்றலாம் என்றமையால். 180 |