இராமனும் கரனும் எதிர்ரெதிர் பொருதல்

3054. ஏற்றி நாண், இமையாமுன்
     எடுத்து, அது,
கூற்றினாரும் குனிக்க,
     குனித்து, எதிர்
ஆற்றினான்அவன் ஆழிஅம்
     தேர், சரம்
நூற்றினால், நுண்
     பொடிபட, நூறினான்.

    (இவ்வாறு) இமையாமுன் - கண் இமைக்கும் நேரத்திலே; அது
எடுத்து -
அந்த வில்லையேந்தி; கூற்றினாரும் குனிக்க - யமனும் கண்டு
அஞ்சும்படி; குனித்து - வளைத்து; நாண் ஏற்றி - நாணையிழுத்துப் பூட்டி;
சரம் நூற்றினால் - நூறு அம்புகளால்; எதிர் ஆற்றினான் அவன் -
எதிரே வந்து போர் செய்தவனான அந்த அரக்கனுடைய; ஆழி அம் தேர்-
வலிய சக்கரம் பூண்ட அழகிய தேரை; நுண் பொடிபட நூறினான் -
நுண்ணிய பொடியாகுமாறு அழித்தான்.

எதிர்த்த கரனது தேரை இராமபிரான் நூறு அம்புகளால் அழித்தான்
என்பது. கூற்றினாரும் குனித்தது - அதுகாறும் இராவணனது ஆணைக்கு
அஞ்சி அரக்கரிடம் அணுகாதிருந்து, இப்பொழுது இராமனின் துணை
வலியால் இனி அவ்வரக்கர்களைப் பற்றலாம் என்றமையால்.          180