3055. எந்திரத் தடந் தேர்
     இழந்தான்; இழந்து,
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து,
     அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன்
     தோள் எனும்
மந்தரத்தில் மழையின்
     வழங்கினான்.

    (கரன்) எந்திரத் தடந் தேர் இழந்தான் - வலிய சக்கரம் பூண்ட
தனது பெரிய தேரை இழந்தான்; இழந்து - (அவ்வாறு) தேரையிழந்ததனால்;
ஆர்த்து அந்தரத்திடை எழுந்து - ஆரவாரம் செய்து கொண்டு
வானத்திலே கிளம்பி; சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும் மந்தரத்தில்
-
அழகிய ஒப்பற்ற வில்லையுடைய இராமபிரானின் தோளாகிய மந்தர
மலையின் மேல்; மழையின் - மழை பொழிந்தாற் போல; அம்பு எலாம்
வழங்கினான் -
(தன்) அம்புகளையெல்லாம் சொரிந்தான்.

     தேரை இழந்த அரக்கனான கரன் வானத்தில் ஆர்த்தெழுந்து
இராமனுடைய தோள் மேல் மழை போல அம்புகளைச் சொரிந்தான்
என்பது. அந்த அம்புகள் இராமனின் தோள்களுக்குச் சிறிதும்
அழிவுண்டாக்காமையை 'மந்தரத்தில் மழையின்' என்னும் உவமை
விளக்கும். மந்தரம் பாற்கடலைக் கலக்கியது; அது போல இராமனின் தோள்
அரக்கர் சேனைக் கடலைக் கலக்குவதென்பார் 'தோளெனும் மந்தரத்தின்'
என்றார்.                                                     181