3056. | தாங்கி நின்ற தயரத ராமனும், தூங்கு தூணியிடைச் சுடு செஞ் சரம் வாங்குகின்ற வலக் கை ஓர் வாளியால், வீங்கு தோளொடு பாரிடை வீழ்த்தினான். |
தாங்கி நின்ற தயரத ராமனும் - (கரன் சொரிந்த அம்புகளைத் தன் மேல் விழாதபடி) தடுத்து நின்ற தசரதனின் மைந்தனான இராமபிரானும்; தூங்கு தூணியிடை - (தோளில்) கட்டப்பட்ட அம்பறாத் தூணியிலிருந்து; சுடு செஞ்சரம் வாங்குகின்ற - வெம்மையான சிவந்த அம்புகளையெடுத்து விடுகின்ற; வலக் கை - அக்கரனின் வலக்கையை; வீங்கு தோளொடு - பருத்த தோள்களோடு; ஓர் வாளியால் பாரிடை வீழ்த்தினான் - ஓர் அம்பினால் துண்டித்து நிலத்தின் மேல் விழச் செய்தான். இராமனும் கரனது அம்பு வாங்கும் வலக் கையை ஓர் அம்பினால் தோளோடும் வீழ்த்தினான் என்பது. தூங்குதல் - தொங்குதல்; வாங்குதல் - வெளியே எடுத்தல். 182 |