3057. வலக் கை வீழ்தலும், மற்றைக்
     கையால் வெற்றி
உலக்கை, வானத்து உரும்
     என, ஓச்சினான்;
இலக்குவற்கு முன்
     வந்த இராமனும்
விலக்கினான், ஒரு வெங்
     கதிர் வாளியால்.

    வலக்கை வீழ்தலும் - (தனது) வலக்கை வெட்டுண்டு கீழே
விழுந்தவுடனே; மற்றைக் கையால் - (கரன்) இடக் கையினால்; வெற்றி
உலக்கை -
வெற்றி தரக் கூடிய உலக்கையை; வானத்து உரும் என -
மேகத்தினிடையே தோன்றும் இடியைப் போல; ஓச்சினான் - உயரே
எடுத்து (இராமன் மேல்) வீசினான்; இலக்குவற்கு முன் வந்த இராமனும் -
இலக்குவனுக்கு முன்னே பிறந்த இராமனும்; ஒரு வெம் கதிர் வாளியால் -
கொடிய ஒளியுடைய ஓர் அம்பினால்; விலக்கினான் - (தன் மேல்
படாதவாறு) தடுத்து விலக்கினான்.

     வலக் கையை இழந்த கரன் இடக்கையால் உலக்கையை இராமன்
மேல் எறிய, அவ் இராமனும் ஓர் அம்பினால் அதைத் தடுத்தான் என்பது.
இலக்குவற்கு முன் வந்த இராமன் : இரட்டுற மொழிதலால் இலக்குவனுக்கு
முன்னே பிறந்த இராமன் எனவும், போர்க்கெழுந்த இலக்குவனைத் தடுத்து
அவனுக்கு முன்னே வந்த இராமன் எனவும் பொருள் கொள்ளலாம்.    183