வானவர் மகிழ்தல் 3060. | ஆர்த்து எழுந்தனர், ஆடினர், பாடினர், தூர்த்து அமைந்தனர், வானவர் தூய் மலர்; தீர்த்தனும் பொலிந்தான், கதிரோன் திசை போர்த்த மென் பனி போக்கியது என்னவே. |
(அப்பொழுது) வானவர் - தேவர்கள்; ஆர்த்து எழுந்தனர் - ஆரவாரஞ் செய்து எழுந்து; ஆடினர் பாடினர் - ஆடிப் பாடிக் கொண்டு; தூய்மலர் தூர்த்து - தூய்மையான கற்பக மலர்களை (இராமன் மேல்) பொழிந்து; அமைந்தனர் - நின்றார்கள்; தீர்த்தனும் - தூயவனான இராமபிரானும்; திசை போர்த்த - திசையெங்கும் மூடிய; மென் பனி - மென்மையான பனியை; கதிரோன் - சூரியன்; போக்கியது என்ன - போக்கி விளங்கியது போல; பொலிந்தான் - (பகையழித்து) விளங்கினான். கதிரவன் திசையெங்கும் கவிந்த பனியைப் போக்குவது போல இராமன் தன்னைச் சூழ்ந்த அரக்கர் கூட்டத்தை எளிதில் விரைவிலே அழித்தான் என்பது. இதில் இராமனைக் கதிரவனாகவும் போரில் சூழ்ந்திருந்த அரக்கர்களை மென்பனியாகவும் உவமித்தார். 186 |