3066. அலங்கல் வேற் கை
     அரக்கரை ஆசு அறக்
குலங்கள் வேர் அறுப்பான்
     குறித்தாள், உயிர்
கலங்கு சூறை வன் போர்
     நெடுங் கால் என,
இலங்கை மா நகர் நொய்தின்
     சென்று எய்தினாள்.

    அலங்கல் வேற் கை அரக்கரை - வெற்றி மாலையணிந்த வேலைக்
கையிலே கொண்ட அரக்கர்களை; குலங்கள் ஆசு அற வேர் அறுப்பான்-
குலங்கள் அடியோடு ஒழிய வேரறுக்கும் பொருட்டு; குறித்தாள் -
எண்ணினவளாய் (சூர்ப்பணகை); உயிர் கலங்கு வன் போர் சூறை நெடுங்
கால் என -
உலகத்து உயிர்கள் கலங்கியழிதற்குக் காரணமான
வன்மையாகத் தாக்கும் பெரிய சூறாவளியைப் போல; நொய்தின் சென்று -
விரைவாகச் சென்று; இலங்கை மா நகர் எய்தினாள் - இலங்கை மாநகரை
அடைந்தாள்.

     சூர்ப்பணகை இலங்கை சென்று, சீதையைத் தான் கவரத்
தொடங்கியது முதல் கரன் முதலியோர் சேனையோடும் மடிந்தமை
ஈறாகவுள்ள செய்திகளைக் கூறுதல் - உடனே இராவணன் வந்து
சீதையையெடுத்துப் போதற்கும் அது இராவணன் முதலான அரக்கர்களின்
நாசத்திற்கும் காரணமாதல் பற்றி இவள் சென்று செய்தி கூறக் கருதுவதை
மற்றை யரக்கரையும் அழிக்கக் கருதியதாக நினைந்து, அரக்கரை ஆசறக்
குலங்கள் வேரறுப்பான் குறித்தாள்' என்றார். தற்குறிப்பேற்றவணி.       192