| 3070. | வண்டு அலங்கு நுதல் திசைய வயக் களிற்றின் மருப்பு ஒடிய அடர்த்த பொன்-தோள் விண் தலங்கள் உற வீங்கி, ஓங்கு உதய மால் வரையின் விளங்க, மீதில் குண்டலங்கள், குல வரையை வலம் வருவான் இரவி கொழுங் கதிர் சூழ் கற்றை மண்டலங்கள் பன்னிரண்டும், நால்-ஐந்து ஆய்ப் பொலிந்த என வயங்க மன்னோ, |
வண்டு அலங்கு நுதல் - வண்டுகள் மொய்க்கின்ற நெற்றியினை உடையனவும்; திசைய - எட்டுத் திக்குகளில் உள்ளனவும் (ஆகிய) ; வயக் களிற்றின் - வலிமை மிக்க யானைகளின்; மருப்பு ஒடிய - கொம்புகள் முறியும்படி; அடர்த்த பொன்தோள் - வன்மையுறத் தாக்கிய அழகிய தோள்கள்; விண் தலங்கள் உற வீங்கி - வான் அளாவும் படி பருத்துயர்ந்து; ஓங்கு உதய மால் வரையின் விளங்க - மேல் வளர்ந்த பெரிய உதய பருவதம் போல் ஒளி வீசவும்; மீதில் குண்டலங்கள் - (அத்தோள்களின்) மேலே (செவியிலிருந்து தொங்கும்) குண்டலங்கள் (இருபதும்); கொழுங் கதிர்க் கற்றை சூழ் - வளமான கிரணங்கள் செறிந்து சூழ்ந்த; இரவி மண்டலங்கள் பன்னிரண்டும் - கதிரவன் மண்டலங்கள் பன்னிரண்டும்; குல வரையை வலம் வருவான் - (மலைக் குலத்தில் உயர்ந்த) மேரு மலையை வலமாய் வர; நால் - ஐந்து ஆய்ப் பொலிந்த என - இருபதாய் விளங்கின என; வயங்க - ஒளி வீசவும்...(மன், ஓ - அசைகள்) இராவணன் திக்கு விசயப் பொழுதில் திசை யானைகளோடு பொருத, அவற்றின் கொம்புகள் இவன் தோள்களின் வலிமையால் முறிந்தன என்பர். ஐராவதம், புண்டரீகம், வாமநம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ பௌமம், சுப்பிரதீகம் என்பன எட்டுத் திசை யானைகள். சூரியர் பன்னிருவர் : தாதா, இந்திரன், அரியமா, மித்திரன், வருணன், அம்சுமான், பர்ஜன்யன், பகன், விவசுவான், பூஷா, விட்டுணு, துவஷ்டா ஆகியோர். தோள் உதய பருவதம் போன்றிருத்தல் உவமையணி. பன்னிரு சூரியர் இராவணனின் இருபது குண்டலங்களாய் நின்றாற் போலிருந்தனர் என்பது தற்குறிப்பேற்ற அணி. 4 |