கலிவிருத்தம்

3072. ஆய்வு அரும் பெரு வலி
     அரக்கர் ஆதியோர்
நாயகர் நளிர் மணி
     மகுடம் நண்ணலால்,
தேய்வுறத் தேய்வுறப் பெயர்ந்து,
     செஞ் சுடர்
ஆய் மணிப் பொலன் கழல்
     அடி நின்று ஆர்ப்பவே,

    செஞ்சுடர் ஆய்மணி - சிவந்த ஒளி படைத்த தேர்ந்தெடுத்த
மாணிக்கங்கள் பதிக்கப் பெற்ற; பொலன் கழல் - பொன்னால் ஆகிய வீரக்
கழல்; ஆய்வு அரும் பெருவலி - (இவ்வளவினதென்று) ஆராய்தற்கரிய
பெரிய வலிமையை உடைய; அரக்கர் ஆதியோர் - இராக்கதர்கள்
முதலானவர்களுடைய; நாயகர் நளிர்மணி மகுடம் - தலைவர்களின்
பெருமைக்குரிய மணிகள் பதித்த கிரீடங்கள்; நண்ணலால் - (அவர்கள்
வணங்கும் போதெல்லாம்) வந்து தன் மேற்படுதலால்; தேய்வு உறத்
தேய்வுற -
தேய்வினை அடையுந்தோறும், பெயர்ந்து - புதிய ஒளியை
மீண்டும் பெற்று; அடிநின்று ஆர்ப்ப - (தன்) பாதங்களில் பொருந்தி
ஒலிக்கவும்.... (ஏ - அசை)

     இது முதல் ஆறு கவிகள் பல்வகைத் தேவரும் இராவணன்
அவையில் பணிந்து நிற்றலைக் கூறுகின்றன.                        6