3074. | இன்னபோது இவ் வழி நோக்கும் என்பதை உன்னலர், கரதலம் சுமந்த உச்சியர், மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் துன்னினர், முறை முறை துறையில் சுற்றவே, |
மின் அவிர் மணி முடி - மின்னலென ஒளி விரிக்கும் மணிகள் பொருந்திய மகுடம் சூடிய; விஞ்சை வேந்தர்கள் - வித்தியாதர மன்னர்கள்; இன்ன போது இவ் வழி நோக்கும் என்பதை - இன்ன நேரம் இந்தப் பக்கம் (இராவணன்) நோக்குவான் என்பதை; உன்னலர்- அறியாதவர்களாய்; கரதலம் சுமந்த உச்சியர் - (எப்போதும் தங்கள்) கரங்களைத் தலைமேற் சுமந்தவர்களாய்; துன்னினர் - நெருங்கி நின்று; முறை முறை - வரிசை வரிசையாக; துறையில் சுற்ற - அவை மண்டபத்தே சூழ்ந்து நிற்கவும்.... (ஏ- அசை). இராவணன் பார்வை படப் பரிதவித்துக் காத்து நிற்கும் வித்தியாதர வேந்தர் நிலை கூறப்பட்டது. உன்னலர், உச்சியர் - முற்றெச்சங்கள். 8 |