3077. | பிரகர நெடுந் திசைப் பெருந் தண்டு ஏந்திய கரதலத்து அண்ணலைக் கண்ணின் நோக்கிய நரகினர் ஆம் என, நடுங்கும் நாவினர், உரகர்கள், தம் மனம் உலைந்து சூழவே. |
பிரகர - (பாவியரைத்) தண்டனை புரியும்; நெடுந்திசை - (தெற்குப்) பெருந்திசைக்குரிய; பெருந்தண்டு ஏந்திய கரதலத்து - பெரிய கால தண்டம் ஏந்திய கரம் படைத்த; அண்ணலை - தலைவனாம் யமனை; கண்ணின் நோக்கிய - கண்ணெதிரே கண்ட; நரகினர் ஆம் என - நரகவாசிகள் போல; உரகர்கள் - நாகராசர்கள்; தம் மனம் உலைந்து - தம் உள்ளம் சோர்ந்து; நடுங்கும் நாவினர் - (இராவணைக் கண்டு) வாய் குழறியவர்களாய்; சூழவே - சூழ்ந்து நிற்கவும்....(ஏ - அசை). ப்ரஹரம் - அடித்தல் எனும் பொருள் உடைய வட சொல். இராவணனின் கொடுமை உணர்த்த எமன்என்றார். 11 |