3080.மேகம் என் துருத்தி கொண்டு,
     விண்ணவர் தருவும் விஞ்சை
நாகமும் சுரந்த தீந் தேன்
     புனலொடும் அளாவி, நவ்வித்
தோகையர் துகிலில் தோயும்
     என்பது ஓர் துணுக்கத்தோடும்
சீகர மகர வேலைக்
     காவலன், சிந்த மன்னோ,

    விண்ணவர் தருவும்- தேவர்களின் கற்பக மரங்கள் தரும் மலர்களும்;
விஞ்சை நாகமும் - வித்தியாதரர்களின் சிறந்த மரங்களின் மலர்களும்;
சுரந்த தீந்தேன் - சொரியும் இனிய தேனை; புனலொடும் அளாவி -
நன்னீரோடு கலந்து; மேகம் என் துருத்தி கொண்டு - முகில்களாகிற வீசு
குழலில் எடுத்துக் கொண்டு; மகர வேலைக் காவலன் - சுறா மீன்கள்
நிரம்பிய கடலுக்குத் தலைவனாகிய வருணன்; நவ்வித் தோகையர் துகிலில்
தோயும்-
(இராவணன் அவையிலுள்ள) மானும் மயிலும் போன்ற மகளிரது
ஆடைகளில் படியும்; என்பது ஓர் துணுக்கத்தோடும் - என்னும் ஓர்
அச்சத்தோடு; சீகரம் சிந்த - சிறு துளிகளாகச் சிதறவும்........(மன்; -
அசைகள்).

     தரு, நாகம் என்பன மரங்கள்; இங்கு முதலாகு பெயர்களாய்
மலர்களைச் சுட்டின. அவைக்களத்திலுள்ள மகளிர் ஆடையை நனைத்து
விடுமோ என்று அஞ்சினான். இப்பாடல் முதல் ஆறு கவிகள் நீர்க் கடவுள்
முதலியோர் நீர் தெளித்தல் முதலிய பணிவிடைகள் செய்தலைக் கூறும்.  14