3081. | நறை மலர்த் தாதும் தேனும், நளிர் நெடு மகுட கோடி முறை முறை அறையச் சிந்தி முரிந்து உகும் மணியும் முத்தும் தறையிடை உகாதமுன்னம் தாங்கினன் தழுவி வாங்கி, துறைதொறும் தொடர்ந்து நின்று, சமீரணன் துடைப்ப மன்னோ, |
நறைமலர் - நறுமண மலர்களினின்றும் (சிந்துகிற); தாதும் தேனும் - மகரந்தமும், தேனும்; நளிர் நெடு மகுட கோடி - ('அவையினைச் சார்ந்து வந்த அரசர்களின்) பெரிய உயர்ந்த கிரீடத் தொகுதிகள்; முறை முறை அறைய - (நெரிசலால்) ஒன்றோடொன்று உராய்ந்து கொள்ளுதலால்; முரிந்து சிந்தி உகும் - சேத முற்று சிந்திச் சிதறும்; மணியும் முத்தும் - மாணிக்கங்களும் முத்துக்களும்; தறையிடை உகாத முன்னம் - தரையில் விழும் முன்னரே; சமீரணன் - வாயுவாகிய காற்றுக் கடவுள்; தழுவித் தாங்கினன் வாங்கி - ஆங்காங்கு சென்று ஏந்தியெடுத்து; துறை தொறும் தொடர்ந்து நின்று - (மண்டபத்தின்) ஒவ்வோர் இடத்திலும் விடாது சென்று நின்று; துடைப்ப - அவ்விடங்களை மாசுபடாமல் தூய்மை செய்யவும்..... (மன்; ஓ - அசைகள்). இராவணன் அவையில் குப்பையாக விழுவன மலர் மகரந்தமும் மணிகளுமே ஆகும் எனவும், அவையும் உடனுக்குடன் தூய்மை செய்யப்பட்டன எனவும் கூறப்பட்டன. 15 |