3081. நறை மலர்த் தாதும் தேனும்,
     நளிர் நெடு மகுட கோடி
முறை முறை அறையச் சிந்தி
     முரிந்து உகும் மணியும் முத்தும்
தறையிடை உகாதமுன்னம் தாங்கினன்
     தழுவி வாங்கி,
துறைதொறும் தொடர்ந்து நின்று, சமீரணன்
     துடைப்ப மன்னோ,

    நறைமலர் - நறுமண மலர்களினின்றும் (சிந்துகிற); தாதும் தேனும் -
மகரந்தமும், தேனும்; நளிர் நெடு மகுட கோடி - ('அவையினைச் சார்ந்து
வந்த அரசர்களின்) பெரிய உயர்ந்த கிரீடத் தொகுதிகள்; முறை முறை
அறைய -
(நெரிசலால்) ஒன்றோடொன்று உராய்ந்து கொள்ளுதலால்;
முரிந்து சிந்தி உகும் - சேத முற்று சிந்திச் சிதறும்; மணியும் முத்தும் -
மாணிக்கங்களும் முத்துக்களும்; தறையிடை உகாத முன்னம் - தரையில்
விழும் முன்னரே; சமீரணன் - வாயுவாகிய காற்றுக் கடவுள்; தழுவித்
தாங்கினன் வாங்கி -
ஆங்காங்கு சென்று ஏந்தியெடுத்து; துறை தொறும்
தொடர்ந்து நின்று -
(மண்டபத்தின்) ஒவ்வோர் இடத்திலும் விடாது
சென்று நின்று; துடைப்ப - அவ்விடங்களை மாசுபடாமல் தூய்மை
செய்யவும்..... (மன்; ஓ - அசைகள்).

     இராவணன் அவையில் குப்பையாக விழுவன மலர் மகரந்தமும்
மணிகளுமே ஆகும் எனவும், அவையும் உடனுக்குடன் தூய்மை
செய்யப்பட்டன எனவும் கூறப்பட்டன.                             15