3084. | நயம் கிளர் நான நெய் அளாவி, நந்தல் இல் வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ, கயங்களில் மரை மலர்க் காடு பூத்தென, வயங்கு எரிக் கடவுளும், விளக்கம் மாட்டவே. |
வயங்கு எரிக் கடவுளும் - விளங்குகின்ற அக்கினி தேவனும்; நயம் கிளர் நானநெய் அளாவி - நலம் மிக்க நறுமண நெய்யை (அகலில்) சொரிந்து; வியன் கருப்பூரம் - சிறந்த கற்பூரத்தை; மென் பஞ்சின் மீக்கொளீஇ - மெல்லிய பஞ்சுத் திரியின் மேல் வைத்துப் பற்றும் படி செய்து; கயங்களில் - குளங்களில்; மரைமலர்க் காடு பூத்தென - சிவந்த தாமரைப் பூக்கள் பூத்தாற் போல; நந்தலில் விளக்கம் மாட்ட - அணைதலில்லாத விளக்குகளை ஏற்றவும்....(ஏ - அசை). இராவணனுக்கு அங்கியங் கடவுள் விளக்கேற்றும் பணி செய்தமை கூறப்பட்டது. 18 |