3085. அதிசயம் அளிப்பதற்கு
     அருள் அறிந்து, நல்
புதிது அலர் கற்பகத்
     தருவும், பொய் இலாக்
கதிர் நெடு மணிகளும்,
     கறவை ஆன்களும்,
நிதிகளும், முறை முறை
     நின்று, நீட்டவே,

    நல் புதிது அலர் கற்பகத் தருவும் - சிறந்த புத்தம் புது
மலர்களைக் கொண்ட கற்பக மரங்களும்; பொய் இலாக் கதிர் நெடு
மணிகளும் -
தவறுதல் இல்லாத ஒளி உமிழும் பெரிய (சிந்தாமணி
போன்ற) தேவரத்தினங்களும்; கறவை ஆன்களும் - பால் சுரக்கும்
(காமதேனு போன்ற) பசுக்களும்; நிதிகளும் - தேவருலகில் உள்ள
(சங்கநிதி பதுமநிதி போன்ற) பெரு நிதிக் குவியல்களும்; அதிசயம்
அளிப்பதற்கு -
(இராவணனுக்கு) வியப்பை அளிக்கும் முறையில்; அருள்
அறிந்து - (அவன்) அன்பு காட்டும் நேரமறிந்து; முறை முறை நின்று
நீட்ட -
வரிசை வரிசையாய் நின்று தம் பரிசுகளை வழங்கவும் .. (ஏ -
அசை).

     இராவணன் அருள் காட்டுவார்க்கு இத்தேவர் உலகச் செல்வங்கள்
அவ்வப்போது பரிசுகள் பொழிந்தன எனவும் கூறலாம். கற்பகத் தரு -
சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், அரிசந்தனம் என ஜந்து;
தேவமணிகள் - சிந்தாமணி, சூளாமணி; பசுக்கள் காமதேனுவும் அதன்
கன்றான நந்தினியும்; நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம்,
கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என ஒன்பது.                19