3088.ஊருவில் தோன்றிய உயிர்
     பெய் ஓவியம்
காரினில் செருக்கிய
     கலாப மஞ்ஞைபோல்,
வார் விசிக் கருவியோர்
     வகுத்த பாணியின்,
நாரியர், அரு நடம்
     நடிப்ப, நோக்கியே,

    ஊருவில் தோன்றிய - (நாராயண முனிவனது) தொடையினின்றும்
பிறந்து; உயிர்பெய் ஓவியம் - உயிர் நிரம்பிய ஓவியம் போன்ற ஊர்வசி
முதலான; நாரியர் - பெண்கள்; வார் விசிக் கருவியோர் வகுத்த
பாணியின் -
தோல் கயிற்றால் கட்டப்பட்ட இசைக் கருவியாளர்கள்
அமைக்கும் தாள ஒழுங்கிற்கேற்ப; காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை
போல் -
மேகங்களைக் கண்டு உவகை பூண்ட தோகை மயில்களைப்
போல; அருநடம் நடிப்ப - அருமையான நடனத்தை ஆட; நோக்கி -
அதனைப் பார்த்தவாறும்........ ( - அசை).

     பாணியின் ஆரியர் என்று பாடங்கொண்டு ஆரியக் கூத்து எனப்
பொருள் கூறலும் உண்டு.22