சூர்ப்பணகையின் வருகை கண்ட இலங்கையர் துயரம்

3090. தங்கையும், அவ் வழி,
     தலையில் தாங்கிய
செங் கையள், சோரியின்
     தாரை சேந்து இழி
கொங்கையள், மூக்கிலள்,
     குழையின் காதிலள்,
மங்குலின் ஒலி படத்
     திறந்த வாயினள்,

    அவ்வழி - அவ்விடத்தில் (அந்நேரத்தில்); தங்கையும் -
(இராவணன்) தங்கையாகிய சூர்ப்பணகையும்; தலையில் தாங்கிய
செங்கையள் -
தலை மேல் சுமந்த சிவந்த கையை உடையவளும்;
சோரியின் தாரை - இரத்த வெள்ளத்தால்; சேந்து இழி கொங்கையள் -
சிவந்து பெருகும் மார்பை உடையவளும்; மூக்கிலள் - மூக்கை
இழந்தவளும்; குழையின் காதிலள் - குழையணிந்த காதுகளை
இழந்தவளும்; மங்குலின் ஒலிபட - மேகத்தின் இடி முழக்கம்
தோற்கும்படி; திறந்த வாயினள் - ஓலமிட்டுத் திறந்த வாயை
உடையவளும்.

     கொங்கை, மூக்கு, காது ஆகிய உறுப்புக்களை இலக்குவனால் இழந்த
நிலை கூறப்படுகிறது. பொருள் அடுத்த பாடலில் முடிகிறது.24