3092. | தோன்றலும், தொல் நகர் அரக்கர் தோகையர் ஏன்று எதிர், வயிறு அலைத்து, இரங்கி ஏங்கினார்; மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள், தான் தனியவள் வர, தரிக்க வல்லரோ? |
தோன்றலும் - (இவ்வாறு சூர்ப்பணகை) வந்து காட்சி தந்ததும்; தொல் நகர் அரக்கர் தோகையர் - பழமையான இலங்கை நகரின் அசுர குலப் பெண்கள்; ஏன்று - எதிர்கொண்டு; எதிர் - அவளெதிரில்; வயிறு அலைத்து - வயிற்றில் அடித்துக் கொண்டு; இரங்கி ஏங்கினார் - வருந்தி அழுதனர்; மூன்று உலகு உடையவன் தங்கை - மூவுலகங்களுக்கும் தலைவனான இராவணன் தங்கை; மூக்கு இலள் - மூக்கு இழந்தவளாய்; தான் தனியவள் வர - தான் துணையின்றி வர; தரிக்க வல்லரோ? - பொறுக்க இயல்பவராய் ஆவரோ? இது முதல் பத்தொன்பது பாடல்கள் அவள் நிலை கண்டு இலங்கை மக்கள் உற்ற துயரைக் கூறுவனவாம். இது வரை காணாத ஒன்று இலங்கையர் கோன் தங்கைக்கு நேர்தல் கண்டு அரக்கர் அதிர்ந்தனர்.26 |