3093.பொருக்கென நோக்கினர்,
     புகல்வது ஓர்கிலர்,
அரக்கரும் இரைத்தனர்;
     அசனி ஆம் எனக்
கரத்தொடு கரங்களைப்
     புடைத்து, கண்களில்
நெருப்பு எழ விழித்து, வாய்
     மடித்து, நிற்கின்றார்.

    அரக்கரும் - இராக்கதர்களும்; பொருக்கென நோக்கினர் -
(சூர்ப்பணகையைத்) திடீரென்று பார்த்தவர்களாய்; புகல்வது ஓர்கிலர் -
இன்னது கூறுவதென அறியாது; அசனி ஆம் என இரைத்தனர் - இடி
முழக்கம் போலக் கதறி ஒலி செய்து; கரத்தொடு கரங்களைப் புடைத்து -
கைகளோடு கைகளை அறைந்து கொண்டு; கண்களில் நெருப்பு எழ
விழித்து -
கண்களில் நெருப்புப் பொறி பறக்க விழித்துப் பார்த்து; வாய்
மடித்து நிற்கின்றார் -
உதட்டைக் கடித்துக் கொண்டு நின்றார்கள்.    27