3094.'இந்திரன் மேலதோ? உலகம்
     ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ?
     ஆழி யானதோ?
சந்திர மௌலிபால்
     தங்குமே கொலோ,
அந்தரம்?' என்று நின்று
     அழல்கின்றார் சிலர்.

    சிலர் - அரக்கர் சிலர்; அந்தரம் - தீமையானது; இந்திரன்
மேலதோ -
தேவேந்திரன் மீதில் அமையுமோ?; உலகம் ஈன்ற பேர்
அந்தணன் மேலதோ -
உலகைப் படைத்த பிரமன்மீதில் அமையுமோ?;
ஆழியானதோ - சக்கரப்படை கொண்ட திருமால் மீதில் அமையுமோ?;
சந்திர மௌலிபால் தங்குமே கொலோ - சந்திரனை முடியில் தரித்த
சிவனிடத்தில் தங்கி அமையுமோ?; என்று நின்று அழல்கின்றார் - என்று
சொல்லி நின்று மனக் கொதிப்புற்றார்கள்.

     சந்திரமௌலி - வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. ஆழியான் என்னும் சொற்கு பாற் கடலிடத்தான் என்றும்
நீலக்கடல் போலும் மேனியான் என்றும் பொருள் கூறலாம்.            28