3095.'செப்புறற்கு உரியவர்
     தெவ்வர் யார் உளர்?
முப் புறத்து உலகமும்
     அடங்க மூடிய
இப் புறத்து அண்டத்தோர்க்கு
     இயைவதுஅன்று இது;
அப்புறத்து அண்டத்தோர் ஆர்?'
     என்றார் சிலர்.

    செப்புறற்கு உரியவர் தெவ்வர் - குறித்துச் சொல்லத்தக்க பகைவர்;
யார் உளர்? - (இராவணனுக்கு) யாவர் உள்ளார்?; முப்புறத்து உலகமும்
அடங்க மூடிய -
மூவகை உலகம் முற்றிலும் உள்ளடங்கும் படி கவிந்த;
இப்புறத்து அண்டத்தோர்க்கு - இவ்வண்ட கோளத்தில் உள்ளவர்களுக்கு;
இது இயைவது அன்று - இவ்வாறு செய்தல் சாத்தியமன்று; அப்புறத்து
அண்டத்தோர் ஆர்? -
வேறு அண்டத்தில் உள்ளவர் யார் இது
செய்திருப்பார்?; என்றார் சிலர் - என்று பேசினர் சில அரக்கர்கள்.

     அப்புறத்தண்டம் - பகிரண்டம், வெளியண்டம்.              29