3099. | 'தத்து உறு சிந்தையர், தளரும் தேவர் இப் பித்து உற வல்லரே? பிழைப்பு இல் சூழ்ச்சியார், முத் திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார், இத் திறம் புணர்த்தனர்' என்கின்றார் சிலர். |
தத்து உறு சிந்தையர் - தடுமாறும் உள்ளம் கொண்டவர்களாய்; தளரும் - சோர்ந்து போகிற; தேவர் இப் பித்துற வல்லரே - தேவர்களில் எவரேனும் இத்தகைய பைத்தியக்காரச் செயலைச் செய்யவும் துணிந்தனரோ?; பிழைப்பு இல் சூழ்ச்சியார் - (அவ்வாறு செய்திருப்பின்) பிழைத்து வாழும் ஆலோசனை அற்றவர்களாய்; முத்திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் - (தாம் மட்டுமன்றி) மூவகை உலகங்களையும் அழித்தொழிக்க எண்ணியவர்களாய்; இத்திறம் புணர்த்தனர் - இவ்வாறு அழிவைத் தரும் செயல் செய்தனர் போலும்; என்கின்றார் சிலர் - எனச் சில அரக்கர் கூறலாயினர். பித்துற்றார் பேரழிவை அறியாராய் இவ்வாறு செய்திருக்கலாம் எனச் சிலர் கருதினர். 33 |