3101. | கரை அரு திரு நகர்க் கருங் கண் நங்கைமார் நிரை வளைத் தளிர்க் கரம் நெரித்து நோக்கினர்; பிரை உறு பால் என, நிலையின் பின்றிய உரையினர், ஒருவர்முன் ஒருவர் ஓடினார். |
கரை அரு திரு நகர் - கடற் கரையில் அரிதின் அமைந்த செல்வம் மிக்க இலங்கையின்; கருங்கண் நங்கைமார் - கரிய கண்கள் கொண்ட அரக்கர் மாதர்; நிரை வளைத் தளிர்க் கரம் - வளையல் வரிசைகள் பூண்ட தளிர்போன்ற மென் கரங்களை; நெரித்து நோக்கினர் - பிசைந்த கோலத்தில் (சூர்ப்பணகையை) உற்று நோக்கினர்; பிரை உறு பால் என - பிரை குத்திய பாலைப் போல; நிலையின் பின்றிய உரையினர் - இயல்பு குலைந்த தடுமாறிய உரையினராக; ஒருவர் முன் ஒருவர் ஓடினார் - (யாது நேருமோ என அஞ்சி) ஒருவருக்கு முன் ஒருவராக ஓடிச் சென்றனர். கரைதல் சொல்லுதல் எனக் கொண்டு கரை அரு திருநகர் : புகழை எடுத்துச் சொல்லுதலுக்கு அரிய செல்வ நகர் எனவும் கொள்ளலாம். (கரை- முதனிலைத் தொழிற் பெயராகக் கொள்ளின் இப் பொருளாம்). 35 |