3102.முழவினில், வீணையில்,
     முரல் நல் யாழினில்,
தழுவிய குழலினில்,
     சங்கில், தாரையில்,
எழு குரல் இன்றியே,
     என்றும் இல்லது ஓர்
அழு குரல் பிறந்தது, அவ்
     இலங்கைக்கு அன்றுஅரோ.

    அவ் இலங்கைக்கு - அந்த இலங்கை மாநகருக்குத் (தீ நிமித்தமாக)
; முழவினில் வீணையில் - மத்தளம், வீணைகளிலிருந்து; முரல் நல்
யாழினில் -
இசைக்கும் இனிய யாழிலிருந்து; தழுவிய குழலினில் - தன்
வசமாக்கும் புல்லாங்குழலிலிருந்து; சங்கில் தாரையில் - சங்கு, எக்காளம்
ஆகியவற்றிலிருந்து; எழு குரல் இன்றியே - எப்போதும் எழுகிற மங்கல
ஒலி வாராது; என்றும் இல்லது ஓர் அழு குரல் - இதுவரை கேட்காத
அழுகை ஓசையானது; அன்று பிறந்தது - அப்பொழுது தோன்றி ஒலித்தது;
அரோ - அசை.

     இன்னிசை முழங்கிய நகரில் அமங்கல அழுகை ஒலி கேட்கலாயிற்று.
தீ நிமித்தம் கூறியவாறு.                                       36