3103. | கள்ளுடை வள்ளமும், களித்த தும்பியும், உள்ளமும், ஒரு வழிக் கிடக்க ஓடினார்;- வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார்- தள்ளுறும் மருங்கினர், தழீஇக் கொண்டு ஏகினார். |
வெள்ளமும் நாண்உற - பெருங்கடலும் தோற்றுப்போகும் படி; விரிந்த கண்ணினார் - விரிந்த கண்களையுடைய அரக்க மகளிர்; கள்ளுடை வள்ளமும் - (தாம் அருந்தும்) மதுக் கிண்ணங்களும்; களித்த தும்பியும் - மதுவை மொய்த்து ஆரவாரிக்கும் வண்டுகளும்; உள்ளமும் - மதுவில் ஈடுபட்ட மனமும் (ஆகியவற்றை); ஒருவழிக் கிடக்க - ஒரு புறத்திலே விட்டு விட்டு; ஓடினார் - ஓடிச் சென்றார்; தள்ளுறும் மருங்கினர் - துவண்ட இடையினை உடையராய்; தழீஇக் கொண்டு ஏகினார் - (ஒருவரை யொருவர்) தழுவிக் கொண்டு செல்லலாயினர். இனி, சூர்ப்பணகை நிலை கண்டு கண்ணீர் வெள்ளம் பொழிந்த கண்களோடு, மது முதலியவற்றை ஒதுக்கிவிட்டு, அவளைத் தழுவிச் சென்றனர் எனவும் கூறுவர். 37 |