3105. | பொன்-தலை மரகதப் பூகம் நேர்வு உறச் சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின் முற்றிய ஆடலில் முனிவுற்று ஏங்கினார், சிற்றிடை அலமரத் தெருவு சேர்கின்றார். |
(மற்றும் சில மகளிர்); பொன்தலை மரகதப் பூகம் - பொன்னாய்ப் பழுத்த காய்கள் குலுங்கும் பச்சை நிறக் கமுக மரங்களின்; நேர்வுறச் சுற்றிய - (கழுத்து) நோகும்படியாகக் கட்டப்பட்டுள்ள; மணிவடம் தூங்கும் ஊசலின் - மணிகள் பதித்த கயிற்றில் தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்து; முற்றிய ஆடலில் முனிவுற்று - முனைப்பாக ஆடிக் கொண்டிருந்த ஆடலை (சூர்ப்பணகையைக் கண்டதால்) வெறுத்து; ஏங்கினார் - துயரம் கொண்ட நிலையில்; சிற்றிடை அலமர - மெல்லிடை நோகும் படி; தெருவு சேர்கின்றார் - தெருக்களில் சென்று கூடினர். ஊஞ்சல் அமைக்கப்பட்டுள்ள அழகும், அதற்கு மாறான சோகமும் முரணுற அமைந்துள்ளன. 'பூகம் நோவுற' என்னும் கூற்று மரங்களுக்கும் உயிருண்டு என்ற சிந்தனையைப் புலப்படுத்திற்று. 39 |