கலிவிருத்தம் (வேறு)

3107.'நெய்ந் நிலைய வேல் அரசன்,
     நேருநரை இல்லான்,
இந் நிலை உணர்ந்த பொழுது,
     எந் நிலையம்?' என்னா,
மைந் நிலை நெடுங் கண் மழை
     வான் நிலையது ஆக,
பொய்ந்நிலை மருங்கினர்
     புலம்பினர், புரண்டார்.

     நெய்ந்நிலைய வேல் அரசன் - நெய் பூசி அழகு செய்யப் பெற்ற
வேலேந்திய அரசனும்; நேருநரை இல்லான் - தனக்கு எதிராக நிற்பார்
எவரும் இல்லாதவனும் (ஆகிய இராவணன்); இந்நிலை உணர்ந்த பொழுது-
(சூர்ப்பணகைக்கு உற்ற) இக் கொடிய நிலையினை அறியுங்கால்;
எந்நிலையம் என்னா - எத்தகைய மனநிலை கொள்ள நேருமோ என்று;
மைந்நிலை நெடுங்கண் - மை நிலைபெற்ற தம் பெரிய கண்களில்; மழை
வான் நிலையது ஆக -
பொழியும் கண்ணீர் மேகம் சொரியும் மழையை
நிகர்த்ததாக; பொய்ந் நிலை மருங்கினர் - பொய்யோ என்னும் இடை
படைத்த பெண்கள்; புலம்பினர், புரண்டார் - அழுது கீழே விழுந்து
புரண்டனர்.

     இடையின் மென்மையை உயர்வு நவிற்சியாகப் பொய்யான இடை
என்று மொழிந்தார். (3606 வரையிலும் உள்ளது போலவே 3107 முதல் 3128
முடியுமளவு உள்ளனவும் கலிவிருத்தங்களே எனினும் சீரின் அசைகள் வேறு
அமைப்புடையன).                                              41