3108. | மனந்தலை வரும் கனவின் இன் சுவை மறந்தார்; கனம் தலை வரும் குழல் சரிந்து, கலை சோர, நனந் தலைய கொங்கைகள் ததும்பிட, நடந்தார்;- அனந்தர் இள மங்கையர்- அழுங்கி அயர்கின்றார். |
அனந்தர் இள மங்கையர் - துயில் கொண்டிருந்த இளம் பெண்கள் சிலர்; மனம் தலை வரும் கனவின் இன்சுவை மறந்தார் - (சூர்ப்பணகையின் அழுகை கேட்டு) மனத்தின் இடத்தே உண்டான கனவினால் விளையும் இனிய இன்பத்தையும் மறந்து போனவர்களாய்; கனம் தலை வரும் குழல் சரிந்து - முகிலென அமைந்த கூந்தல் சரிந்தவர்களாய்; கலை சோர - ஆடை கலைந்தவர்களாய்; நனந் தலைய கொங்கைகள் ததும்பிட - விரிந்தமைந்த மார்பகங்கள் அசைய; நடந்தார் - நடக்கலாயினர்; அழுங்கி அயர்கின்றார் - வருத்தம் ஓங்க மயங்கலாயினர். மனந்தலை - மனத்தலை என்பதன் மெலித்தல் விகாரம். கனம் மேகம் என்னும் பொருளினது. 42 |