3109. | 'அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் தங்கை நிலை இங்கு இதுகொல்?' என்று, தளர்கின்றார்; கொங்கை இணை செங் கையின் மலைந்து,-குலை கோதை மங்கையர்கள்-நங்கை அடி வந்து விழுகின்றார். |
'அங்கையின் அரன்கயிலை கொண்ட - தன் (இருபது) கரங்களால் சிவபிரான் கயிலை மலையை எடுத்த; திறல் ஐயன் - ஆற்றல் மிக்க நம் தலைவன் (இராவணனுடைய) ; தங்கை நிலை - தங்கையாகிய சூர்ப்பணகையின் கதியே; இங்கு இது கொல் - இப்போது இவ்வாறாயிற்றோ?; என்று - என எண்ணி; குலை கோதை மங்கையர்கள்- அவிழ்ந்து சிதறிய கூந்தலை உடைய அரக்க மகளிர் சிலர்; தளர்கின்றார்- வருத்தம் கொண்டவர்களாய்; கொங்கை இணை செங்கையின் மலைந்து- இரு மார்பகங்களையும் தமது சிவந்த கரங்களால் அடித்துக் கொண்டு; நங்கை அடி - சூர்ப்பணகை காலடியில்; வந்து விழுகின்றார் - வந்து வீழ்கின்றவர்களாயினர். இராவணன் ஆற்றலை நினைந்து, அவன் தங்கைக்கும் இந்நிலையோ என்று கவலை கொண்டனர். 43 |