3110.'இலங்கையில் விலங்கும் இவை
     எய்தல் இல, என்றும்,
வலங் கையில் இலங்கும் அயில்
     மன்னன் உளன் என்னா;
நலம் கையில் அகன்றதுகொல்,
     நம்மின்?' என, நைந்தார்;
கலங்கல் இல் கருங் கண்
     இணை வாரி கலுழ்கின்றார்.

    வலம் - வெற்றி மிக்கதாய்; கையில் இலங்கும் - கரத்திலே
விளங்கும்; அயில் மன்னன் - வேற்படை ஏந்திய அரசனாகிய
(இராவணன்); உளன் என்னா - (ஆட்சித் தலைவனாய்) உள்ளான்
என்பதால்; இலங்கையில் - இலங்கை மாநகரில்; என்றும் விலங்கும்
இவை எய்தல் இல -
எக்காலத்தும் மிருகங்களும் இத்தகைய
கொடுமையை அடைந்ததில்லை; நம்மின் நலம் - நம்முடைய சிறப்புக்கள்;
கையில் அகன்றது கொல் - நம் கைவிட்டு நீங்கிப் போயிற்றோ?; என -
என்று எண்ணி; நைந்தார் - வருந்தியவர்களாய்; கலங்கல் இல் -
இதுவரை கலங்கியறியாத; கருங்கண் இணை - கரிய இரு கண்களிலும்;
வாரி கலுழ்கின்றார் - வெள்ளம் பெருக நின்றார்கள்.

     விலங்குகளும் துன்பம் அறியாத நாடாக இராவணன் ஆட்சியில்
இலங்கை விளங்கியமை புலப்படுத்தப்படுகிறது மயன் மகளை மணம் செய்த
காலத்து இராவணனுக்கு மிக்க சிறப்புடைய வேல் மயனால் வழங்கப்
பெற்றது என்பது வரலாறு.44