3114.தென் திசை நமன்தனொடு
     தேவர் குலம் எல்லாம்,
இன்று, இறுதி வந்தது
     நமக்கு' என, இருந்தார்;
நின்று உயிர் நடுங்கி, உடல்
     விம்மி, நிலை நில்லார்,
ஒன்றும் உரையாடல் இலர்,
     உம்பரினொடு இம்பர்.

     தென் திசை நமன் தனொடு - தெற்குத் திசையினனாகிய எமனுடன்;
'தேவர் குலம் எல்லாம் - அனைத்துத் தேவர்களும்'; 'நமக்கு இன்று
இறுதி வந்தது' -
'நம் எல்லாருக்கும் இன்றோடு முடிவு காலம்
வந்துவிட்டது'; என இருந்தார் - என்று கருதினர்; உம்பரினொடு இம்பர்
-
வானுலகரும் மண்ணுலகரும்; நின்று உயிர் நடுங்கி - அஞ்சி நின்று
உயிரும் பதைக்க; உடல் விம்மி - உடல் பெருமூச்செறிந்து; நிலை
நில்லார் -
ஒரு நிலையில் நிற்க முடியாதவர்களாய்; ஒன்றும் உரையாடல்
இலர் -
ஏதும் பேசலாற்றாது மௌனம் பூண்டனர்.                  48