இராவணன் மீண்டும் சூர்ப்பணகையை வினவல்

3117.'செய்தனர்கள் மானிடர்'
     என, திசை அனைத்தும்
எய்த, நகை வந்தது; எரி
     சிந்தின, கண் எல்லாம்;
'நொய்து அவர் வலித் தொழில்;
     நுவன்ற மொழி ஒன்றோ?
பொய் தவிர்; பயத்தை ஒழி;
     புக்க புகல்' என்றான்.

    (சூர்ப்பணகை) ; 'மானிடர் செய்தனர்கள்' என - மனிதர்கள்
இவ்வாறு செய்தார்கள் என்று கூறவும்; திசை அனைத்தும் எய்த நகை
வந்தது -
(இராவணனுக்குத்) திசைகளெல்லாம் எதிரொலிக்கும்படி நகைப்புப்
பிறந்தது; கண் எல்லாம் எரி சிந்தின - கண்களில் நெருப்புப் பொறி
பறந்தது; 'அவர் வலித் தொழில் - அம் மனிதர்களின் துணிச்சலான
செயல்; நொய்து - அற்பமானது; நுவன்ற மொழி ஒன்றோ - நீ கூறிய
செய்தி உண்மையானது தானே? ; பொய்தவிர் - பொய்யை விட்டுச் சொல்;
பயத்தை ஒழி - அச்சத்தை ஒழிவாயாக; புக்க புகல் - நடந்தவற்றை
மெய்யாகச் சொல்'; என்றான் - என்று மொழிந்தான்.

     மனிதர் செயலெனின் உண்மையாய் இருக்க முடியாதே என்று கருதி
இவ்வாறு கேட்டான். புக்க - புகுந்தவை நிகழ்ந்தவை; பலவின்பாற் பெயர். 51