சூர்ப்பணகையின் விடை 3116. | 'மன்மதனை ஒப்பர், மணி மேனி; வட மேருத் தன் எழில் அழிப்பர், திரள் தோளின் வலிதன்னால்; என், அதனை இப்பொழுது இசைப்பது? உலகு ஏழின் நல் மதம் அழிப்பர், ஓர் இமைப்பின், நனி, வில்லால். |
மணி மேனி - (அம்மானிடர்) மணி போல் ஒளி வீசும் மேனியழகால்; மன்மதனை ஒப்பர் - காமனை ஒத்திருப்பார்கள்; திரள் தோளின் வலி தன்னால் - திரண்ட தோள்களின் வலிமையைக் கணக்கிட்டால்; வடமேருத் தன் எழில் அழிப்பர் - வடக்கில் உள்ள மேரு மலையின் அழகையும் தோல்வியுறச் செய்வர்; என் அதனை இப்பொழுது இசைப்பது? - அவ்வாற்றல்களை இங்கே இப்போது விரித்துப் பேசி என்ன பயன்; வில்லால் - (தம்) வில்லாற்றலால்; ஓர் இமைப்பின் - கண்ணிமைப் பொழுதில்; உலகு ஏழின் நல்மதம் நனி அழிப்பர் - ஏழு உலகங்களின் வலிமை மிக்காரை யெல்லாம் மிக ஆற்றலோடு அழிக்க வல்லவர் ஆவர். இராம இலக்குவரின் அழகு, வலிமை இரண்டினையும் இப்பாடலில் கூறினாள். 52 |