3119.'வந்தனை முனித்தலைவர்பால்
     உடையர்; வானத்து
இந்துவின் முகத்தர்; எறி
     நீரில் எழு நாளக்
கந்த மலரைப் பொருவு
     கண்ணர்; கழல், கையர்;
அந்தம் இல் தவத் தொழிலர்;
     ஆர் அவரை ஒப்பார்?

    (மேலும் அவர்கள்); முனித்தலைவர் பால் வந்தனை உடையர் -
தவ நலம் சான்ற பெரியோரிடம் வணக்கம் செய்யும் இயல்பினர்; வானத்து
இந்துவின் முகத்தர் -
விண்ணில் விளங்கும் மதியம் போல் முகம்
உடையவர்; எறி நீரில் - அலை வீசும் நீர் நிலையில்; எழு நாளக் கந்த
மலரை -
வளரும் தண்டோடு கூடிய மண மிகு தாமரைப் பூவை; பொருவு
கண்ணர் -
ஒத்த கண்களை உடையவர்; கழல் கையர் - அம்மலர்
போன்றே அமைந்த காலும் கரமும் உடையவர்; அந்தம் இல்தவத்
தொழிலர் -
எல்லையற்ற தவமே கடமையாகக் கொண்டவர்; ஆர் அவரை
ஒப்பார்? -
அவர்களுக்கு நிகராக யாரைக் கூற முடியும்? (எவரையும் கூற
முடியாது).

     முனிவரை வணங்குவரென்றமையின் பிறர் யாரையும் வணங்க
மாட்டார் என உணர்த்தினாள். இப்பாடலிலும் அவர்கள் அழகும் பண்பும்
உரைக்கப்பட்டன.                                             53