3121. | 'மாரர் உளரே இருவர், ஓர் உலகில் வாழ்வார்? வீரர் உளரே, அவரின் வில் அதனின் வல்லார்? ஆர் ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள், ஐயா? ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார். |
ஐயா - ஐயனே; ஓர் உலகில் வாழ்வார் - ஒரே உலகின்கண் வாழ்கின்றவர்களாய்; இருவர் மாரர் உளரே? - இரண்டு மன்மதர்கள் இருக்கின்றார்களா?; அவரின் வில்லதனில் வல்லார் - அவர்களைக் காட்டிலும் வில் வலிமையில் வல்லவர்; வீரர் உளரே - (வேறு) வீரர்களும் இருக்கின்றார்களா?; ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள் ஆர் - அவர்களுக்குச் சமானமாக உள்ளவர் எவரேனும் உண்டா?; ஓர் ஒருவரே இறைவர் மூவரையும் ஒப்பார் - அவர்களில் ஒவ்வொருவருமே மும்மூர்த்திகளுக்கு நிகரானவர்களாய் இருப்பார்கள். மும்மூர்த்திகளும் சேர்ந்தால் இவர்களில் ஒருவருக்குச் சமமாவர் என இவர்களை உயர்த்திக் கூறினாள்.55 |