3122."ஆறு மனம் அஞ்சினம், அரக்கரை"
     எனச் சென்று
ஏறு நெறி அந்தணர் இயம்ப,
     "உலகு எல்லாம்
வேறும்" எனும் நுங்கள் குலம்,
     "வேரொடும் அடங்கக்
கோறும்" என, முந்தை ஒரு
சூளுறவு கொண்டார்.

ஏறு நெறி அந்தணர் - மேலான நெறியில் வாழும் முனிவர்கள்;
ஆறுமனம் அஞ்சினம் அரக்கரை - அடக்கம் மிக்க எங்கள் மனம்
அரக்கர்களைக் கண்டு அஞ்சுகிறது; எனச் சென்று இயம்ப - என்று
(அம்மானிடரிடம்) சென்று சொல்லவும் (அம்மனிதர்கள்); உலகு எல்லாம்
வேறும் எனும் -
அனைத்து உலகங்களையும் நாங்கள் வெல்வோம் என்று
கூறும்; நுங்கள் குலம் - அரக்கர்களாகிய உங்கள் வமிசத்தை; வேரொடும்
அடங்கக் கோறும் என -
வேரோடு அழித்து முடிப்போம் என்று; முந்தை
ஒரு சூளுறவு கொண்டார் -
முன்பு ஒரு சபதம் செய்துள்ளனர்.

     அகத்தியப் படலத்தில் முனிவர்க்கு அபயம் தந்த செயல்
கூறப்பட்டுள்ளது. ஆறு மனம் - வினைத் தொகை.                   56