3123. | 'தராவலய நேமி உழவன், தயரதப் பேர்ப் பராவ அரு நலத்து ஒருவன், மைந்தர்; பழி இல்லார்; விராவ அரு வனத்து, அவன் விளம்ப, உறைகின்றார்; இராமனும் இலக்குவனும் என்பர், பெயர்' என்றாள். |
(அவர்கள்) தரா வலய நேமி உழவன் - பூமி முழுவதையும் தன் ஆட்சிச் சக்கரத்தால் கட்டுப்படுத்தியவனான; தயரதப் பேர் - தயரதன் என்னும் பெயரை உடைய; பராவரு நலத்து ஒருவன் - புகழ்ந்துரைக்க ஒண்ணாத சிறப்புக்கள் கொண்ட ஒரு மன்னனது; மைந்தர் - மக்கள்; பழி இல்லார் - பழி கூறலாகாத சிறப்புடையவர்; அவன் விளம்ப - அத் தயரதன் இட்ட கட்டளையால்; விரா வரு வனத்து உறைகின்றார் - நெருங்குதற்கு அரிய காட்டில் வசிக்கின்றார்கள்; பெயர் இராமனும் இலக்குவனும் என்பர் - அவர்கள் முறையே இராமன் என்றும் இலக்குவன் என்றும் பெயருடையார்; என்றாள் - என்று (சூர்ப்பணகை) கூறினாள். இராமலக்குவர் வனம் புகுந்த வரலாறு கூறினாள். 57 |