இராவணன் தன்னைத் தானே பழித்துக் கூறுதல்

3124.'மருந்து அனைய தங்கை மணி
     நாசி வடி வாளால்
அரிந்தவரும் மானிடர்; அறிந்தும்,
     உயிர் வாழ்வார்;
விருந்து அனைய வாளொடும், விழித்து,
     இறையும் வெள்காது.
இருந்தனன் இராவணன் இன்
     உயிர்கொடு, இன்னும்.

    மருந்தனைய தங்கை - அமுதம் போல் அடியவளான தங்கை
சூர்ப்பணகையின்; மணிநாசி - அழகிய மூக்கை; வடிவாளால்
அரிந்தவரும் -
கூர்வாள் கொண்டு அறுத்தெறிந்தவர்களும்; மானிடர் -
(இழிந்த) மனிதர்களே ஆவர்; அறிந்தும் உயிர் வாழ்வார் - (அங்ஙனம்)
தாக்கப்பட்டாள் என் தங்கை என அறிந்த பின்னும் உயிர்
பிழைத்திருந்தனர்; இராவணன் - இராவணனாகிய நான்; விருந்தனைய
வாளொடும் -
புதிது போலும் என் வாளொடும்; இன்னும் விழித்து -
இன்னும் விழித்துக் கொண்டு; இறையும் வெள்காது - சற்றும் வெட்கமின்றி;
இன்னுயிர் கொடு - இனிய உயிரைச் சுமந்து கொண்டு; இருந்தனன் -
இருக்கின்றேன்!

     மனிதர்கள் தீங்கிழைத்த பின்னும் அவர்களை மாய்க்காமல் இருக்கும்
தன்னையே நொந்து கொள்கிறான் இராவணன்.                      58