3126.'மூளும் உளது ஆய பழி
     என்வயின் முடித்தோர்
ஆளும் உளதாம்; அவரது ஆர்
    உயிரும் உண்டாம்;
வாளும் உளது; ஓத விடம்
     உண்டவன் வழங்கும்
நாளும் உள; தோளும் உள;
     நானும் உளென் அன்றோ?

    மூளும் உளதாய பழி - உருவாகி வந்திருக்கும் அவமானத்தை; என்
வயின் முடித்தோர் -
என்பால் இழைத்த; ஆளும் உளதாம் -
மானிடர்கள் இன்னும் இருந்தனர்; அவரது ஆர் உயிரும் உண்டாம் -
அவர்களின் இனிய உயிரும் இன்னும் அழிக்கப்படாமல் இருந்தது; வாளும்
உளது -
(என் கை) வாளும் வறிதே இருந்தது; ஓதவிடம் உண்டவன் -
கடலில் பிறந்த நஞ்சினை உண்ட சிவபெருமான்; வழங்கும் நாளும் உள -
அளித்த என் ஆயுட் காலமும் இருந்தது; தோளும் உள நானும் உளென்
அன்றோ? -
(பயனின்றி) என் தோள்களும் உள்ளன, நானும் (செயலின்றி)
இருந்தேன் அல்லவா?

     வாளும், தோளும் பிறவுமாம் வல்லமை பெற்றிருந்தும் பழிக்கு
ஆளானேன் என்ற தன்னிரக்கம் புலப்படுத்தப்படுகிறது.               60