3127. | 'பொத்துற உடற்பழி புகுந்தது" என நாணி, தத்துறுவது என்னை? மனனே! தளரல் அம்மா! எத் துயர் உனக்கு உளது? இனி, பழி சுமக்க, பத்து உள தலைப் பகுதி; தோள்கள் பல அன்றே? |
மனனே - என் உள்ளமே! உடல் பொத்துறப் பழி புகுந்தது - உடலையும் துளைத்துப் பழி சென்று நின்றது; என நாணி - என்று வெட்கமுற்று; தத்துறுவது என்னை? - ஏன் தடுமாறுகிறாய்?; தளரல் - சோர்வடையாதே; உனக்கு எத்துயர் உளது? - உனக்கு அவமானம் சுமக்கும் எவ்விதத் துன்பமும் வேண்டியதில்லை (ஏனெனில்); இனிப் பழி சுமக்க - இனிமேல் அப்பழியைத் தாங்க; பத்துள தலைப்பகுதி - தலைகள் பத்து உள்ளன; தோள்கள் பல அன்றே - தோள்களும் பல உள்ளன அன்றோ? அம்மா - இடைச் சொல் பழி தீர்க்க வேண்டிய தலைப் பாரமும், தோள் வலிமையும் உண்டென மொழிகின்றான். 61 |